மகாபாரதக் கதைகளை ஏட்டில் படித்தவர்கள் பலர். ஆனால் அக்கதைகளை ஏட்டில் படிக்காதவர்களிடையே பல வேறுபட்ட கதைகள் வழக்கில் உள்ளன. அவை ஏட்டில் இடம்பெறாத நாட்டுப்புறக் கதைகள். செவிவழிக் கதைகளாக வழங்கப்பெறும் அக்கதைகள் மூலம் பல அறநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. மனிதர்களின் மனங்களைப் பக்குவப்படுத்துவதற்காகவே கதைகள் பிறந்தன. அவை ஏட்டு வடிவக் கதைகளாக இருந்தாலும் செவிவழிக் கதைகளாக இருந்தாலும் நன்மை பயப்பவைகளே தவிர தீமை விளைவிப்பன அல்ல.

அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றிலிருந்த கருவை அழிப்பதற்காக அசுவத்தாமன் பிரமசிரசு என்ற அம்பை ஏவினான். கண்ணன் அருளால் உத்தரையின் கரு காக்கப்பட்டது. இருப்பினும் கருவிலுள்ள குழந்தையைக் கருகச் செய்தது. கருகிய குழந்தை கரிக்கட்டையாக இறந்து பிறந்தது. பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடித்தவர் தொட்டால்தான் கரிக்கொட்டை உயிர்பெறும். முனிவர்கள் பலர் தொட்டனர். உயிர் பெறவில்லை. கடைசியில் கண்ணன் தொட்டான் உயிர்பெற்றது. கேபிகாஸ்திரிகளுடன் கொஞ்சிவிளையாடிய கண்ணனா பிரமச்சரிய விரதம் காத்தவன் என்ற வினா எழுகிறது. ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதை ஒன்று வினா எழுப்பி விளக்கமும் அளிக்கிறது.

பாண்டவர்கள் இராசசூய யாகம் செய்தபோது தலைமையிடத்திலிருந்த கண்ணனைக் காணாமல் தேடினர். அப்போது கண்ணன் விருந்தினர் உண்ட எச்சில் இலைகளை அள்ளிக் கொட்டும் பணியில் ஈடுபட்டிருந்தான். உலகம் பூஜிக்கும் கண்ணனுக்கு இப்பணி தேவையா என்ற கேள்வி எழுகிறது. கேள்வி எழுப்பி ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதை ஒன்று பதிலும் தருகிறது.

மகாபாரதப்போர் நடக்கும்போது பகலில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக இருந்த கண்ணன் இரவில் குதிரைகளுக்கு உணவூட்டிப் பணிவிடை செய்தான். குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமாஎன்றகேள்வியை அர்ச்சுனன் மூலம்எழுப்பிவிளக்கமளிக்கிறது ஏட்டில் இல்லாத இன்னொரு கதை.

பஞ்சபாண்டவர்களைச் சகுனி மூலம் சூதாடி வென்றான் துரியோதனன். அந்த நேரத்தில் சகுனியை வெல்லக் கண்ணனை அழைத்திருந்தால் இப்படிக் காடு காக்க வேண்டியநிலை வந்திருக்குமா என்ற கேள்வியைச் சகாதேவன் எழுப்புகிறான். விளக்கம் கதையில் உள்ளது.

கண்ணன் மீது அதிக ஈடுபாடுள்ளவனாகக் காட்டிக் கொண்ட அர்ச்சுனனுக்குப் பாடம் புகட்டக் கண்ணன் எண்ணினான். கண்ணன் மேல்கொண்ட பக்தியால் மகனை இரு கூறாக அறுத்த பெற்றோரையும் அறுக்கும்போது மகனின் இடக்கண்ணில் நீர் வந்ததால் ஏற்கமாட்டேன் என்று சொன்ன கண்ணனிடம் வலப்புறம்தானே உனக்குக் காணிக்கையாகிறது: இடப்புறத்துக்கு அந்தப்பாக்கியம் இல்லையே என்று இடதுகண் அழுவதாகப்பெற்றோர் கூறுகின்ற கதைஇந்நூலில் இடம்பெறுகிறது.

துரோணருக்கு அகவத்தாமன் என்ற மகன் மட்டுமல்ல சாந்தா என்ற மகளும் இருந்ததாகவும் துரோணரின் சாதிவெறி அகந்தை அம்மகளால் அழிந்ததென்றும் ஒரு நாடோடிக்கதை கூறுகிறது.

துரியோதனனுடன் பிறந்தவர் நூறுபேர். சகுனியுடன் பிறந்தவரும் நூறுபேர். வணங்கா முடியான துரியோதனனால் நூறு மாமன்மாருக்கும் மரியாதை செலுத்த முடியவில்லை. அதனால் அவர்களைச் சிறையில் அடைத்து ஆளுக்கு ஒருபருக்கைச்சோறு உணவாகக்கொடுத்தான். சகுனி நூறுபேரின் பருக்கைச் சோறும் உண்டு உயிர் பெற்றான். மற்றவர்கள் இறந்தனர். துரியோதனனைப்பழிவாங்கவே கைவரிசையைக் காட்டினான் என்ற கதை இந்நூலில் இடம்பெறுகிறது.

விதுரனின் மனைவி கொடுத்த பழத்தோலைக் கண்ணன் ஏன் உண்டான்? பாஞ்சாலியின் பட்டுச்சேலைகண்ணனின் மானத்தை எப்படிக் காத்தது? கண்ணன் வெண்ணெய் திருடும்போது கையும் களவுமாகப் பிடிப்பதற்காக உறியில் கட்டிவைத்த மணி கண்ணன் வெண்ணெய் திருடும்போது ஒலிக்காமல், வெண்ணையைவாயில் வைக்கும்போது ஏன் ஒலித்தது என்பன போன்ற பல சம்பவங்கள் அடங்கிய ஏட்டில் இல்லாத கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.

இக்கதைகளைப் புலவர் த. கோவேந்தன் தொகுத்துள்ளார். அவருடைய முயற்சி பாராட்டுக்குரியது. இந்நூலை வெளியிட்டு வாசகர்களின் பேராதரவைப் பெரிதும் நாடுகிறோம்.

-பதிப்பகத்தார்.

Please join our telegram group for more such stories and updates.telegram channel