26. குடிசையை எரித்த நெருப்பை கும்பிட்டு நின்ற பக்தர்

 


“நிற்கின்ற தெல்லாம் நெடுமால்என்று ஓராதார் 

கற்கின்ற தெல்லாம் கடை”

 
என்றார் திருமழிசை மன்னன்
“பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தம்” என்றார் தாயுமானார்
“அறியும்செந் தீயைத்தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள்” என்றார் நம்மாழ்வார்

 

“தீக்குள் விரலையிட்டால் நந்தலாலா - உன்னைத் 

தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”

 
என்று வழிமொழிந்தார் பாரதியார்
தம் குடிசையை எரித்த நெருப்பை நெடுமால் என்று வணங்கி நின்றார் ஓர் அடியார்
அவர் பெயர் நாம தேவர்
நாமதேவருக்கு ஒரு கூரைச் சிறுகுடில்தான் இருப்பிடம் ஒரு நாள் குடில்மேல் வேய்ந்திருந்த புல்லில் நெருப்புப் பற்றிக் கொண்டது நெருப்பின் செந்நாக்குகள் நீண்டு குடிசையைச் சாம்பலாக்கும் காட்சியைக் கண்டார் நாமதேவர்.
தமக்குள்ள ஒரே குடிசை வெந்து அழிகின்றதே என்று அவர் வருந்தவில்லை குடிசையை எரித்து வானுயர நிமிரும் நெருப்பை, நெடுமாலின் பொன்மேனி என்று எண்ணினார்
“இறைவா! இந்த ஏழையையும் பொருட்படுத்தித் திருக்காட்சி தருகின்றாயே இதற்கு அடியேன் என்ன கைம்மாறு செய்வேன்!” என்று நாத் தழுதழுக்கக் கூறி உள்ளமெல்லாம் உருகி உடம்பெலாம் கண்ணீர் சோரக் கைகூப்பி நின்றார் குடிசைபாதி மட்டும் எரிந்து நின்றுவிட்டது
“நெருப்புருவம் கொண்டு. செந்நிறச் சுவாலையுடன் தோன்றிய நீ ஏன், முழுக்குடிசையையும் உன் வடிவாகக் காட்டாமல், பாதியுடன் நின்று விட்டாய்” என்று பரவசத்துடன் கூறினார் தமர் உகந்தது எவ்வுருவமோ அவ்வுருவம் தானே ஆகும் இறைவன், நாமதேவர் விரும்பியபடியே குடிசையின் மறுபாதியையும் எரித்து முடித்தான். நாமதேவர். இறைவனின் முழுத்தோற்றமும் கண்டோம் என்ற மகிழ்ச்சியில் திளைத்து நின்றார்.
அடியார் விரும்பினாலும், அவர்களைத் துன்புறவிடுவானா இறைவன் இறைவனே பணியாளாக வந்து, எரிந்து போன குடிசையை மீண்டும் அமைத்துத் தந்தான். 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel